ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகத்தில் கோடிக்கணக்கான பேர் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வெளிச்சந்தையை விட குறைவான விலையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு பை திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.
ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரூ.500 விலையிலான மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துள்ளது.
துவரம் பருப்பு அரைகிலோ, உளுத்தம் பருப்பு அரைகிலோ, கடலை பருப்பு கால் கிலோ வழங்கப்படும். மிளகு 100 கிராம், சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம் வழங்கப்படும்.
மேலும், அத்தியாவசியப் பொருள்களான டீ தூள், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. மளிகைப் பொருட்களின் பைகள் தயாரானவுடன் ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நியாயவிலைக்கடைகளில் ரூ.500-க்கு அளிக்கப்படும் பொருட்களின் அளவு;
உளுந்தம் பருப்பு – 1/2 கிலோ
துவரம் பருப்பு – 1/2 கிலோ
கடலைப்பருப்பு – 1/4 கிலோ
மிளகு -100 கிராம்
சீரகம் -100 கிராம்
கடுகு -100 கிராம்
வெந்தயம் -100 கிராம்
தோசை புளி -250 கிராம்
பொட்டுக்கடலை -250 கிராம்
நீட்டு மிளகாய் -150 கிராம்
தனியாத்தூள் -200 கிராம்
மஞ்சள் தூள் -100 கிராம்
டீ தூள் -100 கிராம்
உப்பு -1 கிலோ
பூண்டு -250 கிராம்
கோல்டுவின்னர் எண்ணெய் -200 மில்லி
பட்டை -10 கிராம்
சோம்பு -50 கிராம்
மிளகாய் தூள் -100 கிராம்
மேற்கண்ட இந்த 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் இனி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் கோடிக்கணக்கான பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.