சென்னை கொரோனா பேரபாயத்தில் இருக்கிறது. சனிக்கிழமை இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னைவாசிகளை கலவரப் படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப் பட்டது. இந்த 231 பேரில் சென்னையில் மட்டும் 174 பேருக்கு பாதிக்கப் பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது.
இந்த பாதிப்பு, தமிழகத்தின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பில் 46 சதவீதம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பால் சென்னையில் சோதனை அதிகரிக்கப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று வெளியான சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 158 ஆண்கள், 72 பெண்கள், ஒரு திருநங்கைக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 10,127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று அரியலூரில் 18 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உள்ளது.
தற்போது 1,384 பேர் சிகிச்சையில் உள்ளனர். வீட்டுக் கண்காணிப்பில் 35,418 பேரும், அரசு கண்காணிப்பில் 40 பேரும் உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை பதிவான பாதிப்புகளில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள்-159 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்-2318 பேர், 60 வயதை கடந்தவர்கள்-280 பேர். – என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.