
கோயில்களிலிருந்து நிதி கோரப்பட்ட சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
தமிழகத்தின் 47 கோயில்களிலிருந்து ரூ.10 கோடியை எடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க உத்தரவிட்ட இந்து சமய ஆணையாளரின் உத்தரவுக்கு தடை கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஆலய நிதியை எடுக்க உத்தரவிட ஆணையாளருக்கு உரிமை இல்லை என்றும் ஆணையாளரின் உத்தரவுக்கு தடை விதித்தும், உத்தரவை திரும்பப் பெற்று அது சம்பந்தமாக வரும் 8.5.2020, அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு தினசரி இலவசமாக உணவளிக்க தமிழக அரசு அறநிலையத்துறை மூலமாக முயற்சி மேற்கொண்டு, தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலரும் ஆணையாளருமான பணீந்தர ரெட்டி, பழனி, திருச்செந்தூர் ஆலய செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து மண்டல இணை ஆணையாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் கோயில் நிதியிலிருந்து – பெரிய கோயில்களிலிருந்து ரூ.10 கோடி நிதியை, முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க கோரியிருந்தார்.


அறநிலையத்துறையின் இந்த சுற்றறிக்கைக்கு பல்வேறு இந்து அமைப்புகள், ஆலய ஆன்மீகக் குழுக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இது போன்ற நடவடிக்கை சட்ட விரோதம் என்று தெரிவிக்கப் பட்டதால், அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கப் பட்டது.
இது தொடர்பாக திருக்கோயில் பக்தர்கள் பாதுகாப்பு பேரவையின் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்த போது…
இன்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற – பொது நல வழக்கு அமர்வு முன்பாக – கோயில் பணம் ₹10 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதை எதிர்த்து என் வழக்கு வந்தது.
விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் வரும் வெள்ளிக்கிழமை வரை ஆணையர் தம் சுற்றறிக்கை மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு, அரசு நீதிமன்றம் முன்பாக தெரிவித்த படி 22.04.2020 தேதியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப் படுகிறது என்று பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது.
இளம் வழக்கறிஞர்கள் நிரஞ்சன் ராஜகோபால், அபினவ் பார்த்தசாரதி, பிரஹலாத் பட் ஆகியோருக்கு மிக்க நன்றி… என்று குறிப்பிட்டார் டி.ஆர்.ரமேஷ்.

இதை அடுத்து அறநிலையத் துறை செயலரின் சுற்றறிக்கை இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் கோயில்கள் மூலமாக ரூ. 10 கோடி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.


