தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. அதுவும் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதிக்கப் படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
அரசு மதுபானக் கடைகள் 7.5.2020 முதல் திறக்கப்படும்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு
பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி
வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு
வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது.
எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள
மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில்
செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப் படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு,
தமிழ்நாட்டிலும் மதுபானக்கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு
முடிவு செய்துள்ளது.
எனினும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள் திறக்கப் படமாட்டாது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் மட்டும் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப் படுகிறது.
- மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.
- ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்படவேண்டும்.
- மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு
அனுமதிக்கக்கூடாது. - மதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது. - அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
- ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைகேற்ப கூடுதல் நபர்களை
பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.