ஓபிஎஸ்., வழியில் ஈபிஎஸ்.,?: தினகரன் தலைமையில் ஓர் அணி: ஆட்சி என்ன ஆகும்?

Published:

edappadi dinakaran panneerselvam - 2026

சென்னை:

சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி., தினகரன் ஆதரவில் ஓர் அணி உருவாகியுள்ளதால், அதிமுக.,வில் மேலும் ஒரு பிளவு தவிர்க்க முடியாததாகியுள்ளது. இது, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு தலைவலியாக அமைந்துள்ளது. ஏற்கெனவே எடப்பாடி ஆதரவாளர்கள் தினகரனை ஒதுக்கி வைப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, எழுந்துள்ள நிலைமை குறித்து விவாதித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி.க்களுடன் புதன் கிழமை நாளை ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுகவில் தற்போது தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. இந்த அணிகளால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசு பெரும்பான்மை பலத்தை இழக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால், அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதனால் ஓபிஎஸ், சசிகலா என இருவரின் தலைமையிலும் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. சசிகலா அணிக்கு எம்எல்ஏக்கள் பலம் அதிகமிருந்ததால் அவரது ஆதரவுடன், சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் சொந்தம் கொண்டாடின. அதனால், அதிமுக கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தாற்காலிகமாக முடக்கி வைத்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் கடைசி நேரத்தில் ரத்தானது. அதன்பின்னர், இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டனர். ஆனால், சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும் என ஓபிஎஸ்., தரப்பு நிபந்தனை விதித்தது. இதனால், இது குறித்து ஆலோசிக்க ஏப்ரல் 17ஆம் தேதி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். அப்போது, தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தைச் சார்ந்தவர்களை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். இதை அடுத்து, கட்சியின் நலன் கருதி, தாம் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தினகரனும் தெரிவித்தார். இருப்பினும், இரு அணிகளின் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கப் படவில்லை.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், தினகரனை தில்லி போலீஸார் கைது செய்தனர். பின் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார் தினகரன். அவர் வெளியில் வந்ததும், தாம் மீண்டும் கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என அறிவித்தார். மேலும் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தில்லி சென்று தினகரனை வரவேற்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னையில் தினகரனுடன் ஆலோசனை நடத்தியதுடன், பெங்களூரு சென்று சசிகலாவையும் சந்தித்தனர். இதனால், தினகரன் ஆதரவு அணி என ஒன்று அங்கே உருவானது வெளியில் தெரிந்தது.

இதனிடையே, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய எடப்பாடி அணியின் டி.ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘கட்சியை விட்டு தினகரனை ஒதுக்கி வைத்துள்ள முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். யாரும் தினகரனைச் சென்று பார்க்க மாட்டோம்’’ எனக் கூறினார்.

இந்நிலையில், தினகரனை வரவேற்க தில்லி சென்று அவரின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வரும் எம்எல்ஏ, க்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால், தற்போது, அதிமுகவில் ஓபிஎஸ்., அணி, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் என மூன்றாக அணிகள் உருவாகியுள்ளன.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ஓபிஎஸ்., அணியில் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது, தினகரனுக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்துள்ளனர்.எனவே, தற்போது முதல்வர் கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. முதல்வர் பழனிசாமிக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்திருந்தனர். அவர்களில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வருவதால் பழனிசாமியின் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களில் சிலர், திவாகரனின் ஆதரவாளர்கள் என்பதால், முதல்வர் பழனிசாமி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், திவாகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது. அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம், பேரவைக் கூட்டத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தற்போது டிடிவி தினகரன் அணிக்கு 22 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர் என்றும், எடப்பாடி பழனிச்சாமிக்கு 99 பேர் ஆதரவும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 12 பேர் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, ஓ.பன்னீர்செல்வம் பாணியில், எடப்பாடி பழனிச்சாமியும் ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமரும் நாள் வெகு  தொலைவில் இல்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img