ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநரா? பொறுப்புள்ள நிர்வாகியா?: புதுவையில் வலுக்கும் கிரண் பேடி-நாராயணசாமி மோதல் !

Published:

kiran bedi - 2026

புதுச்சேரி:

துணை நிலை ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பா? அல்லது பொறுப்புள்ள நிர்வாகியா? உங்கள் முன் உள்ள தேர்வு மிகத் தெளிவானது என்று கூறியுள்ளார் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. அவர் தமது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால், தனக்கு அதிக அதிகாரம் உள்ளது என்று கூறி ஆளுநர் கிரண் பேடி அரசின் நிர்வாக வி‌ஷயங்களில் தலையிட்டு கருத்து கூறி வருகிறார். இதனால் ஆளுநருக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில் உயர் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கிரண் பேடி தலையிட்டதால் நாராயணசாமி ஆளுநருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். அவர் வரம்பு மீறி செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் கிரண்பேடி டிவிட்டரில் கருத்து வெளியிட்டார். அதில் நாராயணசாமியின் நிர்வாகம் தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

இந்தப் பிரச்னை சட்டசபையில் எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன், தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் சட்டசபையில் பூஜ்ய நேரத்தின் போது இந்த பிரச்னையை எழுப்பிப் பேசினர். ஆளுநர் கிரண்பேடியின் போக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

அதற்கு முதலமைச்சர் நாராயணசாமி பதில் அளித்துப் பேசியபோது,

ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து இப்படித்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார். நான் ஒரு வருடமாக அவரைப் பற்றி எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அத்துமீறி, கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகிறார். வேறு வழியில்லாமல் இதை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். புதுவை ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தில்லி ஆளுநருக்கும், புதுவை ஆளுநருக்கும் உள்ள அதிகாரங்கள் வெவ்வேறானவை. புதுவை ஆளுநரைப் பொறுத்தவரை அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு செயல்பட வேண்டும். ஆனால் கிரண்பேடி இதை உணர்ந்து கொள்ளாமல் இஷ்டப்படி செயல்படுகிறார். இதுகுறித்து மத்திய அரசிடம் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளேன்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இது குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயலை செய்கிறார். அமைச்சரவை அனுப்பும் கோப்புகளை உடனடியாக தீர்வு கண்டு அனுப்புவதாகவும், தன்னிடம் எந்த கோப்பும் தேங்கிக் கிடக்கவில்லை என்கிறார். ஆனால் பல கோப்புகளை அங்கும், இங்கும் அனுப்பி சுற்ற விடுகிறார்.

உதாரணத்திற்கு விவசாயிகளுக்கு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோப்பு அனுப்பினோம். அந்தக் கோப்பினை சட்டத்துறைக்கு அனுப்பினார். அவர்கள் இது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்றார்கள். ஆனால் அந்தக் கோப்பினை அவர் தில்லிக்கு அனுப்பிவிட்டார்.


ஆதிதிராவிட மாணவர்களுக்கான கடன் உள்ளிட்ட பல கோப்புகளும் இதே நிலையில்தான் உள்ளன. அவருடைய செயல்பாடுகளால் இப்படி ஒரு ஆளுநர் நமக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தனது வரம்புக்குள் செயல்பட வேண்டும். இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். இனி அவரை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது. மக்களை திரட்டி அவரைத் தடுக்க வேண்டும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

ஆளுநரை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சென்று சந்திக்க கூடாது. அமைச்சர்கள் உத்தரவு இல்லாமல் இனி யாரும் ஆளுநரை சந்தித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… என்று அவர் பேசினார்.

இதனிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து கொண்டு இருக்கிறது. அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவரை திரும்பப் பெறாவிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார். இதே கருத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோரும் வலியுறுத்தினார்கள். அப்போது என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தப் பிரச்னைக்கு அரசுதான் காரணம் என்று கூறி விவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களைப் பேச அனுமதிக்காததால் அவர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img