- தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!
- தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
- தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,051ஆக உயர்ந்தது!
தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று, இன்று 798 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8002 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வரையில் 5895 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 798 பேரில் 514 பேர் ஆண்கள், 284 பேர் பெண்கள். இதுவரை வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில், 5421 பேர் ஆண்கள்; 2579 பேர் பெண்கள்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்த் தாக்குதல் குறித்து, இன்று 11 ஆயிரத்து 584 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதை அடுத்து இதுவரை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2051 பேர் சிகிச்சை முடிந்து வீடு களுக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 4273 பேர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 53 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.
இன்று பல்வேறு உடல்நல கோளாறுகள் காரணமாக சென்னையைச் சேர்ந்த 50 வயது ஆண், 67 வயது பெண்மணி, கடலூரைச் சேர்ந்த 32 வயது பெண், சென்னையைச் சேர்ந்த 36 வயது பெண், சென்னையைச் சேர்ந்த 66 வயது ஆண், மற்றும் 65 வயதான கன்னியாகுமரியை சேர்ந்த ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 538 பேருக்கு வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 97 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! அரியலூரில் 33 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும் திருவண்ணாமலையில் 10 பேருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டது
மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4 பேருக்கும், தஞ்சாவூர் தூத்துக்குடியில் தலா மூன்று பேருக்கும், தர்மபுரியில் இருவருக்கும், விருதுநகர் வேலூர் ராணிப்பேட்டை கன்னியாகுமரி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!