16 வருடங்களுக்கு முன்பு தனது கணவரின் உறுப்புகளை தானம் செய்த மனைவி, அதே நபருக்கு தற்போது தனது சிறுநீரகத்தையும் தானமாக கொடுத்துள்ளார்.
புளோரிடாவில் வசிக்கும் டெர்ரி என்பவரது கணவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதனால் அவரது உறுப்புகளை அவரது மனைவி தானம் செய்துள்ளார்.
அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளால் பல்வேறு நோயாளிகள் குணமடைந்து நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் டெர்ரியின் கணவரது சிறுநீரகம் மற்றும் கணையம் ஆகியவை ஜெஃப்ரி என்பவருக்கு பொருத்தப்பட்டது. இதனை தொடர்ந்து டெர்ரி மற்றும் ஜெஃப்ரி நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட சிறுநீரகம் படிப்படியாக செயலிழந்து வருவதாக ஜெஃப்ரி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த டெர்ரி தானே சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்துள்ளார். முதலில் இதனை விளையாட்டாக நினைத்த ஜெஃப்ரி, இறுதியில் அந்தப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று சிறுநீரக தானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரகத்தை பொருத்தியுள்ளனர். 16 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த கணவனின் சிறுநீரகத்திற்கு அருகிலேயே தற்போது மனைவியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனது கணவருக்கு அருகில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதாக டெர்ரி கூறியுள்ளார். அடுத்த 10 முதல் 14 வருடங்களுக்கு சிறுநீரகம் நலமுடன் செயல்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாடியில் இருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த தனது கணவரின் உறுப்புகளை மற்றவர்களின் நலனுக்காக தானம் செய்த மனைவி, தற்போது அதே நபருக்காக தனது சிறுநீரகத்தையும் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.