நாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
தமிழக காவல்துறையின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தனக்கு வழங்கப்பட்ட வரையறையைத் தாண்டி செயல்படுவதால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. குறிப்பாக சாத்தான்குளம் பிரச்சினையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பங்களிப்பு மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழகமெங்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டுமென போர்க்குரல் எழுந்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதுபோல திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா அவர்கள் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுபோல நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு என்பது காவலர்களுக்கு உதவி செய்ய ஒரு அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தனது வரையறையைத் தாண்டி, காவல்துறை செயல்பாட்டையும் தாண்டி பொதுமக்களை அவதூறாக திட்டுவதும் ,தடியால் அடிப்பதும், மக்களை வாடா, போடா என ஒருமையில் திட்டுவதும், பொதுமக்களை மரியாதை இல்லாமல் நடத்துவதும் என அதிகரித்துவிட்டது. இதனால் காவல்துறையின் தியாகம் மறக்கப்பட்டு விட்டது.
காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தங்களுடைய வாழ்நாளில் நிம்மதியாக ஒரு தீபாவளியோ ஒரு பொங்கலையோ கொண்டாட முடியாமல் மக்களுக்காக தங்களைத் தியாகம் செய்து பணியாற்றிக் கொண்டு இருக்கக் கூடிய சூழ்நிலையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் அத்துமீறல் காவல்துறையின் தியாகத்தை மறக்க செய்கிறது, மறைக்க செய்கிறது.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பால் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பது மாறி காவல்துறை பொதுமக்களின் பொது எதிரி என ஒரு சூழலை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் உருவாக்கிவிட்டார்கள் .
நாகை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் பொதுமக்களை நல்லமுறையில் மரியாதையோடு நடத்தினார்கள்.
ஆனால் ஊரடங்கு கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் லத்தியை கையில் வைத்துக் கொண்டு ஆங்காங்கே வன்முறையை பிரயோகம் செய்தார்கள். இதனால் காவல்துறைக்கு பெருத்த கெட்ட பெயர் ஏற்பட்டது. காவலர்களின் உழைப்பு வீணாய் போனது .
நாகை மாவட்டத்திலும் ஆங்காங்கே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ன் அத்துமீறல்கள் நடந்தேறி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களும் துடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய மக்களின் நண்பனாக இருக்கக்கூடிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் உடனடியாக நாகை மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் ஊர் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் களுடைய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.