வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 18-ம் தேதி பதிலளிக்க தமிழக
அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வேலைநிறுத்தத்தால் மாணவர்களுக்கு
ஏற்படும் பாதிப்புக்கு நஷ்டஈடு தர உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி
ஆசிரியர்களை எச்சரித்துள்ளனர்.
முன்னதாக அரியலூர் மாணவி அனிதா போல மாணவர்கள் பாதிக்கப்பட அரசு கொள்கைகளை
காரணம் என குற்றம்சாட்டி சூரியபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு சென்னை
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருபாகரன் மாணவர்கள்
பாதிக்கப்பட அரசு மட்டும் காரணம் அல்ல என்றும் போராட்டத்தில் ஈடுபடும்
ஆசிரியர்கள் அமைப்புகளும் காரணம் என்று கூறினார். அரசியல் லாபத்திற்காக
அனைத்து அரசியில் கட்சிகளும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாகவும்
நீதிபதி குற்றம்சாட்டினார்.
பிற்காலத்தில் எந்த ஒரு விவகாரத்திலும் நீதிமன்றத்தை நாட முடியாத அளவிற்கு
உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.
5 மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கேவலம் என்று தெரிவித்தர். ரூ.40,000, ரூ.50,000
சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது.
ஆசிரியர்கள் என்ன தொழிலாளர் வர்க்கத்தினரா எனவும் நீதிபதி கேள்வி
எழுப்பியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சங்கங்கள் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில்
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் போன்று சிறப்பாக செயல்படும்
அதிகாரிகளை அரசு உடனடியாக இடமாற்றம் செய்துவிடுவதாக நீதிபதி தெரிவித்தார்.
ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.