சோம பானம்
– ஜெயஸ்ரீ எம். சாரி,
நாக்பூர்.
பலருக்கு சோமபானம் காபிதான். இது
பல சுவைகளில் நாவிற்கு அமூதூட்டும் பானம்,
பாலின் தரத்தினை தன் சுவையினால் வெளிப்படுத்தும் பானம்,
சுண்டக் காய்ச்சியப் பாலில் தயாரித்த காபி ஒரு சிலரின் விருப்பம். ஸ்டிராங் டிகாஷனில் காபி – வேறு சிலரின் விருப்பம்,
குறைந்த சர்க்கரை காபியே காப்பிப் பிரியர்களின் விருப்பம். கை நடுங்கும் பாட்டிக்கு கூட காபியை பிடிக்கும் போது வந்துவிடும்
தெம்பு. கையில் சூடு தாங்காதவர்கள் துண்டைப் பிடித்துக் கொண்டு நாவிற்கு சூடான காப்பியை பருகுவர்,
காப்பியினால் கலாட்டாவான கல்யாணங்கள் பலவுண்டு,
‘அதிதி’யாய் வருவோர்க்கு
காபி கொடுக்கலாம் எனும் போது பல வீடுகளில் காபி ‘பில்டர்கள்’ காலை வாரி விடுவது, பல இல்லத்தரசிகளுக்கு ஒரு தலைவலி. கொஞ்சம் ‘இன்ஸ்டண்ட்’ காபியை டிகாஷனுடன் கலந்தும் சமாளிப்பதில் திறமையானவர்கள் சில இல்லத்தரசிகள். பல காப்பி ஜாம்பவான்கள் அதையும் ‘கச்சிதமாக’ முகர்ந்து, சமாளிப்புத் திலகங்களை பாராட்டத் தயங்க மாட்டார்கள்.
சில இல்லங்களில்
காபி கொடுக்கப்படும்
டம்பளர்களின் அளவும், டிகாஷனின் தரமும் ( முதல், இரண்டாம், மூன்றாம் டிகாஷன்) காபி பருகுபவர்களின் தரத்தை நிர்ணயிக்கும்- எனபது ஒரு வழக்கு.
காபி பில்டரை அருமையாய் சுத்தம் செய்து அடுப்பினருலில் வைத்து,
அளவான தண்ணீரை கொதிக்க வைத்து, பில்டரில் காபி பொடியை போட்டு, கொதித்த வெந்நீரை காபி பொடியின் மேல் அப்படியே வட்டமாக விடும் போது வரும் ஓசை காதிற்கும், நுரையுடன் கூடிய திரவமும் கண்ணிற்கும் விருந்து. சில நிமிடங்களில் அருமையான டிகாஷன் தயாரானதும், பாலில் அளவான சர்க்கரையுடன், டிகாஷன் கலந்து சரியான நிறத்துடன் காபி கிடைப்பவர்கள் பாக்கியசாலிகள்.
தஞ்சாவூர் மாவட்ட பெண்ணான எனக்கு ஏனோ என் தாயார் காபியை அறிமுகப்படுத்தவில்லை. இருந்தாலும் எனக்கு காபி தயாரிப்பது எனக்கு பிடித்த ஒன்று.
அளவான காபி குடித்து
வளமான வாழ்வு வாழ்வீர் என்று காபி தினமான இன்று வாழ்த்தத் தோன்றுகிறது.



