தமிழக அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குவதை நிறுத்தியது பொறுப்பற்ற செயல் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் 2 வயது முதல் சுமார் 69 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவுத் திட்டத்திற்கு முட்டைகளை கொள்முதல் செய்வதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் வழங்கப்படவில்லை என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இதற்காக கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பல்வேறு முறைகேடுகளால் சத்துணவு திட்டத்தை சீரழித்துள்ள அதிமுக அரசு, முட்டை விலை அதிகமானதை காரணங்காட்டி சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவதை முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மையாக நடத்துவதிலும், மாணவ, மாணவிகளின் உடல் ஆரோக்கியத்திலும், கல்வி முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


