சென்னை: கோச்சடையான் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக லதா ரஜினிகாந்த்திடம் கொடுக்கப்பட்ட தொகையை ரஜினிகாந்த் தலையிட்டு பெற்றுத் தர வேண்டும் என ஆட் பீரோ தனியார் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3டி அனிமேஷன் திரைப்படம் கோச்சடையான். இப்படத்தை விநியோகம் செய்ததில் லதா ரஜினிகந்த் ரூ.10 கோடி மோசடி செய்ததாக அண்மையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலத்தில் தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர் புகார் மனு அளித்தார். ஆனால், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளரான மீடியா ஒன் குளோபல் நிறுவனம் விளக்கம் தெரிவித்திருந்தது . அதில், இப்பட பரிவர்த்தனைகளில் லதா ரஜினிகாந்த் ஒரு போதும் தலையிடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோச்சடையான் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்பட்ட தொகையை ரஜினிகாந்த் தலையிட்டு பெற்றுத் தர வேண்டும் என ஆட் பீரோ தனியார் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நாகர், மதுபாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கோச்சடையான்’ திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் ரிலீசானது. இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக மீடியா ஒன் நிறுவனம் எங்களிடம் ரூ.10 கோடியை கடனாக பெற்றது. மீடியா ஒன் நிறுவனத்துக்காக கடன் ஒப்பந்தத்தில் லதா ரஜினிகாந்த் கையெழுத்திட்டார். படம் வெளியானதும் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாக உறுதியளிக்கவும் செய்தார். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. நாங்கள் கொடுத்த ரூ.10 கோடிக்கு 12 சதவீதம் கமிஷன் மற்றும் வட்டியுடன் மொத்தம் ரூ.15.84 கோடி திருப்பித் தரவேண்டும். ஆனால் இதுவரை ரூ.9 கோடியை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.6.84 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறார்கள். இந்த பிரச்னை குறித்து லதா ரஜினிகாந்த் சரியான பதில் கூற மறுக்கிறார். இதற்காக நாங்கள்தான் அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். மாறாக அவர்கள் எங்கள் மீது வழக்கு போட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த பிரச்னையை ரஜினிகாந்த் கவனத்துக்கு கொண்டு போக நினைத்தோம். ‘இந்த சின்ன பிரச்னைக்கெல்லாம் அவரிடம் பேச வேண்டாம்’ என்று லதா ரஜினிகாந்த் கூறினார். இந்த பிரச்னையில் ரஜினிகாந்த் தலையிட்டு பணத்தை பெற்றுத் தரவேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.
கடன் தொகையைத் தர லதாவிடம் ரஜினிகாந்த் வற்புறுத்தி பெற்றுத்தர வேண்டும்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

