spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்துக்கு ஊழல் நோக்கமே முதல் காரணம் : ராமதாஸ்

உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்துக்கு ஊழல் நோக்கமே முதல் காரணம் : ராமதாஸ்

- Advertisement -

சென்னை; உடன்குடி மின் திட்ட ஒப்பந்த ரத்துக்கு ஊழல் நோக்கம்தான் முதல் காரணம் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், உடன்குடியில் 1320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைப்பதற்காக பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களைத் தெரிவிக்கக் கோரி ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்த நிறுவனங்களில் ஒன்றான மத்திய தெற்கு சீன மின்சக்தி வடிவமைப்பு நிறுவனம் (Central Southern China Electric Power Design Institute – CSEPDI) தலைமையிலான கூட்டியக்கம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இடம் பெற்றுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாகின்றன. உடன்குடி அனல் மின்நிலையத்திற்கான மொத்த மதிப்பு ரூ.8,400 கோடி ஆகும். வழக்கமாக மின் திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதற்கான நிதியை அரசே ஏற்பாடு செய்து தரும். ஆனால், உடன்குடி திட்டத்திற்கான ஒப்பந்தம் திட்டச் செலவுகளுக்கான நிதியில் குறைந்தது 75 விழுக்காட்டை ஒப்பந்தக்காரர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெற மொத்தம் 4 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், அவற்றில் 2 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள சீன நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளியும், பாரத மிகு மின் நிறுவனத்தின் (பெல்) ஒப்பந்தப்புள்ளியும் ஏற்கப்பட்டு கடந்த 18.10.2014 அன்று திறக்கப்பட்டன. உடன்குடி மின் திட்டத்தை ரூ.8025 கோடியில் செயல்படுத்தித் தருவதாக சீன நிறுவனம் அதன் ஒப்பந்தப்புள்ளியில் தெரிவித்திருந்தது. ஆனால், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் அதைவிட ரூ.137 கோடி கூடுதலாக வழங்கும்படி கோரியிருந்தது. மற்ற அம்சங்களிலும் சீன நிறுவனம் தான் சாதகமான மதிப்பீடுகளைத் கூறியிருந்தது. உதாரணமாக திட்ட மதிப்பீட்டில் 75 விழுக்காட்டை ஒப்பந்ததாரர்கள் தங்களது சொந்த முயற்சியில் கடனாக பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சீன நிறுவனம் 85% கடனை பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தது; ஆனால், பெல் நிறுவனம் 75% கடனை மட்டுமே பெற்றுத் தர முன் வந்திருந்தது. இதனால் இத்திட்டத்தை செயல்படுவதற்காக பெல் நிறுவனத்திற்கு அரசுத்தரப்பு முதலீடாக தர வேண்டியதை விட சீன நிறுவனத்திற்கு ரூ.1400 கோடி குறைவாக வழங்கினால் போதுமானது. அதேபோல் 7.2% வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக சீன நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில், பெல் நிறுவனம் 12.25% வட்டிக்கு தான் கடன் பெற்றுத்தர முடியும் என்று கூறியிருந்தது. சீன நிறுவனத்திற்கு சாதகமாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், அந்த நிறுவனத்திற்குத் தான் மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பெல் நிறுவனத்திற்குத் தான் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட வேண்டும் என்பதில் தமிழக ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தனர். இதற்கு திரை மறைவில் பல காரணங்கள் உள்ளன. பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை விட தங்களுக்கு கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும் என்பது தான் ஆட்சியாளர்களின் கணக்கு ஆகும். இருப்பினும், சீன நிறுவனம் குறைந்த செலவில் மின் நிலையம் அமைத்துத் தருவதாக கூறியிருந்த நிலையில் அதை ஒதுக்கிவிட்டு பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவது சாத்தியமில்லை. அதுவும், எண்ணூர் அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை குறைந்த விலை குறிப்பிட்டிருந்த தங்களுக்குத் தராமல், பெல் நிறுவனத்திற்கு அளித்ததை எதிர்த்து சீன நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படவுள்ள நிலையில், அவ்வாறு செய்தால் அது தமிழக அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே தான் இந்த முறை சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்காமல் செய்து விட்டால் அடுத்த முறை பெல் நிறுவனத்திற்கு ஏற்றவாறு நிபந்தனைகளை மாற்றி, அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. உடன்குடி மின்திட்டத்திற்காக இரு நிறுவனங்களும் தாக்கல் செய்த ஒப்பந்தப்புள்ளிகளில் தொழில்நுட்ப குறைபாடு இருந்தது தான் அவை ரத்து செய்யப்படுவதற்கு காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. ஏனெனில், எண்ணூர் மின் திட்டத்திற்கும், உடன்குடி மின் திட்டத்திற்கும் ஒரே வடிவத்தில் தான் ஒப்பந்தப்புள்ளிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன; ஒரே வடிவத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவ்வாறு இருக்கும் போது எண்ணூரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் உடன்குடியில் நிராகரிக்கப்படுவதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு 5 மாதங்கள் வரை யாருக்கு ஒப்பந்தம் என்பது பற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. அத்துடன், ஒப்பந்தப் புள்ளி செல்லுபடியாகும் காலத்தை 31.03.2015 வரை நீட்டித்துத் தரும்படி சீன நிறுவனத்தை பல முறை தமிழக அரசு கோரியிருக்கிறது. செல்லுபடியாகாத ஒப்பந்தப்புள்ளியாக இருந்தால் காலக்கெடுவை நீட்டிக்கும் படி சீன நிறுவனத்தை அரசு கோரியிருக்குமா? என்ற மக்களின் வினாவிற்கு தமிழக அரசு தான் பதிலளிக்க வேண்டும். பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்க வேண்டும்; அப்போது தான் தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற எண்ணத்தில் தான் இந்த ஒப்பந்தப்புள்ளிகளை அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. இது தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டப்பிரிவுக்கு எதிரானது. தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாகத் தான் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு கூறுவது உண்மை என்றால், உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை ஆணையம் அமைத்து அதை நிரூபிக்க முன்வர வேண்டும். – என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe