நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நிவர் புயல் மற்றும் கனமழை சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சமும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 6 லட்சமும் என மொத்தம் 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
நிவர் புயலின் போது 61 மாடுகள், 5 எருதுகள், 65 கன்றுகள், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், , ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அதேநேரம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முத;வர் எடப்பாடி பழனிசாமியை இன்று இரவு 9.00 மணியளவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “நிவர்” புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.