திருச்சி: ஜெயலலிதா வெளியே வந்துவிடக் கூடாது என்றே தமிழக அமைச்சர்கள் கோயில் கோயிலாகச் சென்று கும்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன் என நடிகை குஷ்பு பேசினார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியபோது, ‘மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒரு திட்டமல்ல, திருட்டு. விவசாயிகளின் நிலத்தை அவர்கள் அனுமதியின்றி எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வோம் என்கிறது பா.ஜ.க. அரசு. விவசாய நிலத்தை கையகப்படுத்துவதிலும் ஒரு முறை இருக்கிறது, அவை இந்தச் சட்டத்தில் பின்பற்றப்படவில்லை. ஆனால், விவசாயிகளின் வலி, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தெரியும். அதனால்தான், கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தில், விவசாயிகளுக்கு சாதகமான பல அம்சங்களோடு இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை முதலில் எதிர்த்த அ.தி.மு.க., தற்போது நாடாளுமன்றத்தில் இதற்கு ஆதரவாக அந்தர் பல்டி அடித்துள்ளது. அது ஏன் என்றுதான் எனக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெங்களுரில் நடந்து வரும் வழக்குக்கும், இந்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகம் எனக்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே உள்ளது. நீதிமன்றத்தால், தண்டனை பெற்றவர், தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் கோயில், கோயிலாகப் போய் யாகம், சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்கள். எனக்கு என்னவோ, சாமி, அம்மா தண்டனையில் இருந்து விடுதலை பெறணும்னு அவங்க வேண்டிக்கிறா மாதிரி தெரியவில்லை. ஐயா சாமி, தயவு செய்து அவங்க வெளியே வந்துடக் கூடாது. அவங்களை உள்ளேயே வை. அந்த அம்மாவை பார்த்து குனிஞ்ச நாங்க இப்பதான் நிமிர்ந்து நிக்கிறோம்னு அவங்க கோயில் கோயிலா போய் கும்பிடுறாங்க என்று நினைக்கிறேன்” என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சு இப்போது சூட்டைக் கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என்றே அமைச்சர்கள் கோயில் கோயிலாகச் செல்கிறார்கள்: குஷ்பூ
Popular Categories



