
தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்று உதயமானது. இதனை முதலமைச்சர் பழனிசாமி காணொலிக் காட்சி வழியாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக புதிய மாவட்டத்துக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் உருவாக்கப் பட்டு, 5 புதிய மாவட்டங்கள் தோன்றின. இதை அடுத்து புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களும் நியமிக்கப்பட்டனர்.
தனி மாவட்டம் வேண்டும் என்ற மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு காலக் கோரிக்கை நிறைவேறியதில் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.