லூதியானாவைச் சேர்ந்த சீக்கிய இளைஞர், காபூல் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். பிறந்த குழந்தையை தோளில் சுமந்தபடி அவருடைய இறுதிச் சடங்கை, வீடியோ மூலம் மனைவி பார்த்தது அனைவரும் கண்ணீர்விட வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா வைச் சேர்ந்தவர் சன்னி சிங் என் மன்டோ (27). இவருடைய மனைவி ஷிவானி (எ) சினேகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி திருமணம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் ஷிவானிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஷார் மார்க்கெட்டில் மருந்துப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்களை சன்னி சிங் விற்று வந்தார்.
வியாபாரம் தொடர்பாக காபூலில் தங்கியிருந்த சன்னி சிங், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனக்குப் பிறந்த குழந்தையை கடைசி வரை பார்க்காமலேயே சன்னி சிங் உயிரிழந்தது லூதியானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஷிவானி கூறும்போது, ”கடந்த ஆகஸ்ட் மாதம் எனது கணவர் சன்னி சிங் காபூல் சென்றார். அக்டோபரில் மகன் பிறந்தான். அதன்பின், அவர்லூதியானாவுக்கு வரவேயில்லை. எங்களுக்காக காபூலில் சம்பாதிக்ககடுமையாக பணியாற்றினார். ஆனால், அவருடைய எண்ணம் எல்லாம் எங்கள் மீதுதான் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை என்னிடம் தொலைபேசியில் பேசினார். குழந்தையைப் பற்றி நிறைய விசாரித்தார். விடிய விடிய பேசிக் கொண்டிருந்தார். ஆனால், கடைசி வரை குழந்தையைப் பார்க்காமலேயே இறந்துவிட்டார்” என்று கூறி கதறி அழுதார்.
சன்னி சிங்கின் இறுதிச் சடங்கை காபூலில் உள்ள சீக்கிய சிறுபான்மையினத்தவர்கள் நடத்தினர். அந்தக் காட்சிகளை தனது மகனை தோளில் சுமந்தபடி வீடியோவில் கண்ணீர் மல்க பார்த்தார் ஷிவானி.