கோவை மாவட்டத்தில் ராமநாதபுரம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்தக் கடையில் சேலை வாங்குவது போல நடித்து 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் பட்டுப்புடவைகளை திருடி சென்றது. அவர்கள் திருடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.
இதுதொடர்பாக மோகன் ராஜ் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர்கள் காந்திபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் திருடி கைதாகி, ஜாமீனில் இருந்து வெளியே வந்தவர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து பல்வேறு கடைகளில் திருடி வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.
இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டத்தில் பதுங்கியிருந்த முருகன், மணிவாசகம், தனலட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களை கோவைக்கு கொண்டு வந்து போலீசார் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
முருகன் மற்றும் லட்சன் ஆகியோர் தான் இந்த கும்பலுக்கு தலைவர்களாக இருந்துள்ளனர். சேலைகளை திருட 10 பேரை வேலைக்கு வைத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சேலை வாங்குவது போல் நடித்து திருடி சென்றுள்ளனர்.
ஒருக்கட்டத்தில் லட்சன் இறந்துவிட, அவரின் மனைவி தனலட்சுமிக்கும் முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தனலட்சுமியை தனது கூட்டாளியாக சேர்த்துக்கொண்ட முருகன், சேலை திருட்டு தொழிலை தொடர்ந்துள்ளார்.
ரூ. 25,000 முதல் ரூ.50,000 வரை உள்ள பட்டுப்புடவைகள் தான் இவர்களின் டார்கெட். கடைகளில் சேலைகளை திருடிய 10 நாட்கள் போலீசார் தங்களை தேடுகிறார்களா என்று காத்திருப்பார்களாம்.
தேடவில்லை எனில் 11-வது நாளில் பார்ட்டி வைத்து அதை கொண்டுவார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது தான் கம்பத்தில் இருந்த அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அவர்களில் வீட்டில் இருந்த சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சேலைகளின் மதிப்பு ரூ. 1 கோடி வரை இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.