தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில், தற்காலிக அவைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலையில், உறுப்பினர்கள் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். முதலாவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து அவை முன்னவரான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக சார்பில் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்ஆர் காந்தி உள்பட 4 எம்எல்ஏக்களும் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர்.