திருவொற்றியூரில், கொலை மிரட்டல் விடுத்து பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், குடும்ப பிரச்னை காரணமாக தந்தை பிரிந்து சென்று விடவே தாயுடன் வசித்தார்.
உடன், சித்தி, மாமா, தாத்தா, பாட்டி என கூட்டு குடும்பமாக இருந்தனர்.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு, நான்கு நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது. வலி தாங்காமல் தாய் மற்றும் மாமாவிடம் சொல்லியுள்ளார்.
உடனடியாக, ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில், இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த தாய், மகளிடம் விசாரித்த போது, வீட்டில் தனியாக இருந்த போது தாத்தா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறினார். மறுத்த போதும், உனக்கும், உன் குடும்பத்திற்கும் நான் தான் சோறு போடுகிறேன்.
வெளியே சொன்னால், உன்னையும், தங்கையையும் கொலை செய்து விடுவதாக கூறி, தொடர் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதன் காரணமாக பெண் கர்ப்பமானது தெரியவந்தது.
இது குறித்து பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, பன்னீர் செல்வம், 70, என்பவரை கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.