உலகக் கோப்பை போட்டிகளின் 33 வது லீக் சுற்று ஆட்டத்தில் இன்று அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில், 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்க தேச அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இங்கிலாந்தின் சோகம் தொடர்கிறது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய வங்க தேச அணி, துவக்கத்தில் இரு விக்கெட்களை தலா 2 ரன்களில் பறிகொடுத்த போதும், முகமத்துல்லாவின் பொறுப்பான ஆட்டம், சர்க்காரின் நிலைத்த ஆட்டத்தால் ரன் குவித்தது. சர்க்கார் 40 ரன் எடுத்தார். முகமதுல்லா 103 ரன் குவித்தார். முஷ்பிகுர் ரஹிம் 89 ரன் எடுத்தார். வங்க தேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 276 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்தில் சரியாக விளையாடியபோதும் பின்வரிசை சரிந்தது. அலி 19 ரன் எடுத்தார். பெல் 63 ரன் எடுத்தார். ஹேல்ஸ், ரூட் தலா 27ம், 29ம் எடுத்தனர். மோர்கன் டக் அவுட் ஆனார். டெய்லர் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது, இங்கிலாந்து அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. இருப்பினும் பட்லர் 65 ரன் எடுத்தும், வோகர்ஸ் 42 ரன் எடுத்தும், அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஆயினும் ஜோர்டன், ப்ராட், அன்டெர்சன் ஆகியோர், 0,9,0 ரன்களில் ஆட்டம் இழந்து, அணியின் தோல்வியை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்கள் எடுத்து, 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டி, இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அதில் தோற்று வெளியேறியது, இங்கிலாந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை போட்டி லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.
15 ரன்னில் வெற்றி: காலிறுதிக்கு தகுதி பெற்ற வங்கதேசம்; தொடரும் இங்கிலாந்தின் சோகம்
Popular Categories


