சென்னை: மாட்டிறைச்சிக்கு இடைக்கால அனுமதி அளித்து மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு தெரிவிப்பதாக அதன் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை : ஒடுக்கப்பட்ட மக்களின் சத்துணவான மாட்டு இறைச்சிக்கு மராட்டிய மாநில அரசு விதித்துள்ள தடை நாடெங்கும் உள்ள மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பா.ஜ.க. அரசின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போர்ப் பிரகடனமாகவே பார்க்க வேண்டியுள்ள சூழலில் மராட்டிய மாநில உயர்நீதிமன்றம் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்து இடைக்கால அனுமதிக்கு உத்திரவிட்டதை வரவேற்கிறோம். மகாராஷ்டிராவில் இறைச்சிக்காக மாடு மற்றும் எருதுகள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என கோரி பாரதிய கோவனிஷ் ரக்சன் சன்ரக்சன் பரிசத் என்ற அமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில். அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இறைச்சிக்காக மாடு மற்றும் எருதுகள் வெட்டப்படுவதை உடனடியாக தடுக்கும்படி உத்திரவிட்டது. மாட்டு இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மும்பை புறநகர் மாட்டிறைச்சி விற்பனையாளர் நல சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்ற நீதிபதிகள் ‘அரசுக்காக தனிமனிதரின் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. எனவே ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவை அமல்படுத்த தடைவிதித்து, வியாபாரிகள் தங்களிடம் ஏற்கனவே உள்ள மாடுகளை வெட்ட இடைக்கால அனுமதி அளிக்கப்படுகிறது’ என உத்தரவில் குறிப்பிட்டனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை வரவேற்கிறோம். இடைக்கால உத்தரவு, நிரந்தர உத்தரவாக மாறவேண்டும். இந்தியாவின் பெரும்பாலான மக்களின் உணவு உரிமைக்கு அரசுகளும், நீதித்துறையும் உத்திரவாதம் வழங்கவேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.

