மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 7ம் நாளான நேற்றிரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா ஆக.5-ம் தேதி தொடங்கியது. 7ம் நாளான நேற்று காலையில் வளையல் விற்ற லீலை நடைபெற்றது.
இரவு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடைபெற்றது. அப்போது அம்மனிடமிருந்து செங்கோலை பெற்ற தக்கார் கருமுத்து தி. கண்ணன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை வலம் வந்து பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் ஒப்படைத்தார். எட்டு மாதத்துக்கு சுந்தரேசுவரரின் ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம்.
8-ம் நாளான இன்று நரியை பரியாக்கிய திருவிளையாடல், குதிரை கயிறு மாறிய திருவிளை யாடல், 9-ம் நாள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 10-ம் நாள் விறகு விற்ற லீலை நடைபெறவுள்ளது.
கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான நாளை (ஆக.19) பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம் நடைபெறும். இதையொட்டி காலை 8 மணிக்கு சுவாமி நான்கு ஆடி வீதிகளில் புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை பிற்பகல் 1.05 மணி முதல் 1.29 மணிக்குள் நடைபெறும். அன்று பாரம்பரிய வழக்கப்படி முற்பகல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.
அன்று மாலை 4 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.