
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி அரசாணை வழங்கி 40 லட்சம் மோசடி செய்தவரை 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.
தனக்கு அரசு உயரதிகாரிகளை தெரியும் என்றும், பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் கூறி சினிமா பாணியில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளது காவல்துறை.
செங்கல்பட்டு மாவட்டம், கானாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை பெஞ்சமின். இவர், கல்வித் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும், தனக்கு அரசு உயரதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், ஏராளமானோருக்கு அரசு வேலைகள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறி வந்துள்ளார்.
இதை நம்பி, ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் ராஜா என்பவர், தனது குடும்பத்தினருக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதற்காக குறிப்பிட்ட தொகையை பெஞ்சமின் பெற்றுள்ளார்.
இதேபோல் பலரிடமும் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், டிரைவர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அரசு வேலைகள் பெற்றுத் தருவதாக் கூறி, பணம் பெற்றுள்ளார் ஏழுமலை பெஞ்சமின்.
பணம் கொடுத்தவர்கள் வேலை குறித்து கேட்டபோது, அதில் சிலருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார் பெஞ்சமின்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அது போலி பணி நியமன ஆணைகள் என்பதும், தாங்கள் ஏமாற்றபட்டிருப்பதும் தெரியவந்தது.
மீதமுள்ள நபர்களும் நெருக்கடி கொடுத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பணி நியமன ஆணையை பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார் ஏழுமலை பெஞ்சமின்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போலி நியமன ஆணைகளுடன் வந்தபோது, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஏழுமலை பெஞ்சமினை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க, மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிற்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், ஏழுமலை பெஞ்சமின்-ஐ பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், ராமநாதபுரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 22 பேரிடம் 40 லட்சம் ரூபாய் பெற்று, ஏழுமலை பெஞ்சமின் போலி பணி நியமன ஆணைகளை வழங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதன்பேரில் மோசடியில் ஈடுபட்ட ஏழுமலை பெஞ்சமினை போலீசார் கைது செய்தனர்.