நாளை, டிசம்பர் மாதம் 14ம் தேதி திருச்சி மாவட்டம் முழுவதுமாக உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இது பூலோக வைகுண்டம் என வைணவ பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த வருடம் ஏகாதசி டிசம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
இந்துக்கள் பண்டிகையில் வைகுண்ட ஏகாதேசி மிகவும் புனிதமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து வைணவ ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெறும். எனவே, அன்றைய தினம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து போவார்கள். இதை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,’திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நாளை, டிசம்பர் 14ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருந் திருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும்.
அதேசமயம், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு டிசம்பர் 18 ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.