மதுராந்தகம் அருகே இரும்பேடு கிராமத்தில் கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சிற்பங்களை ஆய்வு செய்தபோது ‘விநாயகி’ என்ற பெண் தெய்வ வழிபாடு வழக்கத்தில் இருந்தது தெரிய வந்தது.
மதுராந்தகம் அருகே உள்ளது இரும்பேடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த எழில்முருகன் என்பவர் பழங்கால சிற்பங்கள் தங்கள் கிராமத்தில்இருப்பதாக கடந்த ஆண்டு தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள் இரா.ரமேஷ், மோ.பிரசன்னா, மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ப.த.நாகராஜ் ஆகியோர் அந்தச் சிற்பங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது கல்வெட்டுடன் கூடிய 2 சிற்பங்கள் கிடைத்தன. அவை பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த கிராமத்தில் உள்ள மேட்டுத் தெருவின் தெற்கே நீரோடையில் கிடைத்த முதல் சிற்பம் விநாயகி என்ற பெண் தெய்வத்தின் சிற்பமாகும்.
இரண்டாவது சிற்பம் மேட்டுத் தெருவின் குளக்கரையில் முதல் சிற்பம் போன்ற பலகைக் கல்லில் கல்வெட்டுடன் காணப்பட்டது. இதன் பெயர் சரிவர தெரியவில்லை.
இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ் கூறும்போது, “முதல் சிற்பம் விநாயகி என்ற பெண் தெய்வத்தின் சிற்பமாகும். வேலூரிலும், விழுப்புரம் மாவட்டம் விரிஞ்சியூரிலும் ஏற்கெனவே விநாயகி சிற்பங்கள் கிடைத்துள்ளன.
ஆனால், இரும்பேட்டில் கிடைத்த சிற்பங்கள் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிற்பங்களாகும்.
இரண்டாவது சிற்பத்தை உள்ளூர் மக்கள் துர்க்கை அம்மன் என்று வழிபடுகின்றனர். இது பலகைக் கல்லில் கல்வெட்டுடன் காணப்படுகிறது.
அது ஆண் சிற்பத்தை போன்று உள்ளது. கார்த்திகேயனாக இருக்கலாம் என்று யூகிக்கிறோம். ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஓராண்டு கழித்து மீண்டும் இந்தச் சிலைகளை ஆய்வு செய்ய வந்தோம். அப்போது விநாயகி சிலை அருகே மேலும் ஒரு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இது லகுலீசர் சிற்பம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த 3 சிற்பங்களும், அதில் உள்ளகல்வெட்டு எழுத்தமைப்பின் அடிப்படையிலும் இந்தச் சிற்பங்கள் கிபி5-ம் நூற்றாண்டு மற்றும் 6-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சிற்பங்கள் 1,500 ஆண்டுகள் பழமையானது.
இந்தச் சிற்பங்களில் ‘செயம் பட்டமுத்திர வரிகன் மடவதி’ என்ற கல்வெட்டுவாசகம் காணப்படுகிறது. இந்த ஊரைச் சேர்ந்த முத்திர வரிகன் மடவதி என்பவர் தான் பெற்ற வெற்றியின் நினைவாக இந்தச் சிலைகளை செய்து கொடுத்துள்ளார் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.” என்றார்.