நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

Published:

jayalalitha சென்னை: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது தவறு எனவும், இது பெரும் பண முதலாளிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் சாதகமான சட்டத் திருத்தங்கள் என்றும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார். இச் சட்டத் திருத்தங்களை முதலில் தீவிரமாக எதிர்த்த அதிமுக, என்ன காரணத்தினாலோ, ஏதோவொரு உள்நோக்கத்தோடு திடீரென்று ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்தியில் உள்ள பாஜக அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சில திருத்தங்களை அவசரச் சட்டத்தின் வாயிலாக கடந்த ஆண்டு கொண்டு வந்தது. மக்களவையில் இந்த மசோதா கடந்த 9-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகளின் அடிப்படையில், பாஜக அரசு மேலும் 9 திருத்தங்களை கடந்த 10-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்தச் சட்டத் திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு விலக்குகள் அளிக்கப்படக் கூடாது என்பது அதிமுகவின் முடிவாகும். அதன்படி, இந்தச் சட்டத் திருத்தத்தை எனது உத்தரவின்படி அதிமுக முன்மொழிந்தது. இதை ஏற்றுக் கொண்ட பாஜக அரசு, ஏற்கெனவே தாக்கல் செய்த சட்டத் திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கென இருந்த சலுகைகளை விலக்கிக் கொண்டு விட்டது. இதைத் தொடர்ந்து, எனது உத்தரவின்பேரில் நில கையக சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. நன்மைக்கு மட்டுமே ஆதரவு: அதிமுகவைப் பொருத்தவரை, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு எவை நன்மை ஏற்படுத்தக் கூடியதோ அவற்றை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் எதிரானவற்றை எதிர்ப்பது என்பதும்தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கையாகும். அந்த அடிப்படையில் இந்த சட்டத் திருத்தத்தையும் அதிமுக ஆதரித்தது. என்னைப் பொருத்தவரை, விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிப்பதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து சட்டம் இயற்றிய போதும் அதைச் செயல்படுவத்துவதற்கான அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது என்பதால் அதை தமிழகத்தில் தடுத்து நிறுத்துவோம் என உறுதிபடத் தெரிவித்தேன். அதன்படி, அது தடுத்து நிறுத்தப்பட்டது. மரபணு மாற்றப் பயிர்களுக்கும் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, மீத்தேன் எரிவாயுத் திட்டம் உள்பட பல்வேறு மத்திய அரசின் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதரவு அளித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், தமிழக மக்களின் நன்மைக்காவே நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அதிமுக ஆதரித்தது என்பதை இப்போதாவது கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img