தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, அரசுப் பணிகளில் உள்ள பதவிகளின் அடிப்படையில் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5, 6, 7, 8 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வுகளில் எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பரவல் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை htt:/ /tnpsc.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.