லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு ஸ்ரீலங்காவில் இருந்து குரல் எழுந்திருக்கிறது. ஸ்ரீலங்காவின் யாழ்ப்பாணம் பகுதி திருநெல்வேலியில் இருந்து உருத்திரசேனை அமைப்பின் சார்பில் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…
இலங்கையில் உள்ள லட்சக்கணக்கான இந்துக்களின் சார்பில் எங்களது மனவருத்தத்தை வெளிப்படுத்துகிறோம். தமிழகத்தின் அரியலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதேயான லாவண்யா முருகானந்தம் என்ற சிறுமி, பள்ளி ஊழியர்களால் ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி, மதமாற்றம் செய்வதற்காக கட்டாயப்படுத்தப்பட்டு கடுமையான நெருக்கடியில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறுகிறோம் அந்த சிறுமிக்கும் சிறுமியின் பெற்றோருக்கும் தகுந்த நீதி வழங்கப்பட வேண்டும் ஹிந்து மாணவர்கள் மற்றும் இந்தியாவில் அனைத்து பகுதியில் இருக்கும் இந்துக்கள் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு மதமாற்றத்துக்கு உள்ளாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மதமாற்றத்திற்கு எதிராக போராடி தனது உயிரை இழந்துள்ள இந்தியத் தாயின் குழந்தைக்கும் அவரது குடும்பத்துக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையில் உள்ள இந்துக்களாகிய நாங்கள் இந்தியத் தாய் எங்களுக்கு அளித்துள்ள பங்களிப்புக்காக எப்போதும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்… என்று குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு பாஜக., மற்றும் ஏபிவிபி., தொண்டர்கள் தில்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில், தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரை கிறிஸ்துவராக மதம் மாறுமாறு வற்புறுத்தி பள்ளி நிர்வாகம் தொடர்ந்து துன்புறுத்தியதாக அந்த மாணவி மரண வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு தமிழகத்தில் போலீசாரால் திசை திருப்பப் பட்டு, கிறிஸ்துவ மிஷனரிகளின் பின்னணியில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கும், பள்ளிக்கும் ஆதரவாக மாற்றப்பட்டது. புகார் கொடுத்த மாணவியின் குடும்பத்தின் மீதே சேற்றை வாரி இறைத்து, போலீஸார் கிரிமினல்தனமாக நடந்து கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கின் விசாரணைய சிபிஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் பாஜக., தொண்டர்கள் மற்றும் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி.,அமைப்பைச் சேர்ந்தவர்கள், தில்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி பாஜக., தமிழக பிரிவு ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, ஏபிவிபி., தேசிய பொது செயலர் நிடி திரிபாதி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது சிலர் தமிழ்நாடு இல்ல சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்து உள்ளே செல்ல முயன்றனர். இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று அந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே நாடு முழுவதும் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை என்ஐஏ., விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழக ஊடகங்கள் மறைத்த போதும், பெரிய அளவில் செய்தி பகிரல்களை செய்யாத போதும், தேசிய அளவில் லாவண்யாவின் மரண விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது