ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்தனர். இவர்களில் சிலர் பாக்ஜலசந்தி கடலோர பகுதியில் தனுஷ்கோடி அருகே மீன்பிடி பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இது எங்கள் எல்லை பகுதி, இங்கு ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். இங்கிருந்து உடனே புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரிக்கையும் விடுத்தனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.அப்போது தங்கச்சிமடம் அயன்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது விசைப்படகையும் அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதனால் மற்ற விசைப்படகுகளில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து தப்பித்தால்போதும் என கடலில் விரித்திரிந்த வலைகளை எடுத்து கொண்டு அவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கிராஞ்சி கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அங்கு மீனவர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படை நடவடிக்கை குறித்து மீன்வளத்துறை அலுவலகத்தில் தெரிவித்தனர். கடந்த 26 நாட்களில் தமிழக மீனவர்கள் 80 பேர் வரை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.




