-> K.V. பாலசுப்பிரமணியன்
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து, நன்கமைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது நேற்று தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 05.03.2022 காலை 1130 மனியிலிருந்து மாலை 0530 மணி வரை அதிக அளவு நகராமல் ஒறே இடத்தில் நிலைகொண்டிருந்தது.
பின்னர் இரவு 1130 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அதன் பின்னர் தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (06.03.2022) காலை 0830 மணிக்கு நன்கமைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது.
நேற்று வளி மண்டல காற்றில் ஏற்பட்ட திசைவேக மாறுபாட்டால், (இதனை ஆங்கிலத்தில் vertical wind shear எனக் கூறுகிறோம்) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காற்று சுழற்சி மையத்தை விட்டு வெகு தூரத்திற்கு இடிமுகில் மேகக் கூட்டங்கள் சென்று விட்டன. பின்னர் காற்று சுழற்சி மையத்திற்கும் மேகக்கூட்டங்களுக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது. அதனால் மேகம் வளர்வதற்குத் தேவையான ஈரப்பதம் சரியாகக் கிடைக்கவில்லை. எனவே அந்த மேகக் கூட்டங்கள் கரந்துவிட்டன.
காற்றின் திசைவேக மாறுபாட்டால் சுழற்சியின் உயரம் குறைந்து போனது. இதனால் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகரும் திசை மாறியது. அது தமிழக கடற்கரையை நோக்கி வருகையில் தரைப்பகுதியிலிருந்து வறண்ட நிலக்காற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் சுழற்சியில் கலக்க ஆரம்பித்தது.
எனவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து நன்கமைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிவிட்டது.
நன்கமைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியினால் லேசான முதல் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. அதுவும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யலாம்.
இதனால் தமிழகத்தில் மார்ச்சு மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்ய இருந்த ஆபத்து அகன்றது.