வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததை அடுத்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர் உட்பட பல மாவட்டங்களில் , இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில், கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, படிப்படியாக வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.இந்த தாழ்வு மண்டலம், சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இதனால், கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டது.
தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பிப்பில் நேற்று முன்தினம் காலை வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. இது, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வலுவிழக்க துவங்கியது. நேற்று காலை நிலவரப்படி, தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது.இதனால், கன மழை வாய்ப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதி ஆகிய இடங்களில் மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.




