இரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா மரண விசாரணையை இன்று ஆறுமுகச்சாமி ஆணையம்
தொடங்கியது
அப்போலோ மருத்துவர்கள் விசாரணையில் பங்கேற்றனர்.

குறுக்கு விசாரணையில் 2016ல் ஜெயலலிதா பதவியேற்கும் முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், டாக்டர்கள் ஓய்வெடுக்க பரிந்துரைத்தும் அவர் அதனை மறுத்ததாகவும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அடுத்த கட்ட விசாரணையை மீண்டும் இன்று துவக்கியுள்ளது. முதல்நாள் விசாரணையில், ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணை கமிஷனில் அப்போலோ டாக்டர் பாபு மனோகர் அளித்த வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது,
2016ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டாக்டர் சிவக்குமார் அழைத்ததன் பேரில் பதவியேற்கும் முந்தைய நாள் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தேன்.
அவருக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்தது. அவரால் மற்றொருவர் துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் நிலவியது. சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வெடுக்க பரிந்துரைத்தேன். தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார். அவருக்கு சில மருந்துகளை பரிந்துரைத்தேன்; உடற்பயிற்சி மேற்கொள்ள சொன்னேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.




