ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் மார்ச் 18இல் திருக்கல்யாணம் நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பவுர்ணமியன்று ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு திருக்கல்யாண திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா நாளை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவினை முன்னிட்டு தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் ரத வீதிகளில் ஊர்வலமாக வருவார்கள். அதன்பிறகு மாலை 4 மணிக்கு ஆண்டாளுக்கு பெரியாழ்வார் தேங்காய் பெறுதல் மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதன் பிறகு இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். திருக்கல்யாண நிகழ்ச்சி திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஊரடங்கு முற்றிலும் விளக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




