உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் சில பகுதிகளில் நிறுத்தம் என ரஷ்யா அறிவித்துள்ளது.
முக்கிய நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்கும் வகையில் இந்த போர் நிறுத்தம் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய நாட்டில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
புதின் தலைமைக்கு அமெரிக்க மக்கள் அளிக்கும் இன்னொரு பெரிய அடி இது என்பது இதன் பொருள் என பைடன் கூறியுள்ளார்.
மேலும் புதினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை.
எண்ணெய், எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற பெரிய அளவிலான அச்சம் இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.பைடனின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து எண்ணெய் விலைகள் ஏற்கெனவே உயர்ந்துகொண்டுள்ளன.
ஐரோப்பாவைவிட விரைவாக இத்தகைய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. காரணம், ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவை நம்பி இருப்பவையாகும்.
இதன் தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 140 டாலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையால் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
போரில் திடீர் திருப்பமாக
நேட்டோ அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிட்டு விட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்தார்.கடைசி வரை போராடப் போவதாகவும், எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த சூழலில் உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்தநிலையில்
கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு குறைந்த விலையில் விற்க ரஷ்யா முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலை ஏற்பட்டு பொருளாதாரமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் இந்தியாவிற்கு சந்தை விலையை விட 25 முதல் 27% வரை குறைவான விலையில் கச்சா எண்ணெய் தர முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களையும் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நிலையை சமாளிக்க தங்கள் உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்க ரஷ்யா முனைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனம் இந்திய நிறுவனங்களுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் சர்வதேச நிதி கட்டமைப்பிலிருந்து ரஷ்யா துண்டிக்கப்பட்டுள்ளதால் பணம் செலுத்தும் முறையில் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காண மாற்று வழிகள் குறித்தும் இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருவதாக கூறப்படுகிறது.





