கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடல்பகுதியில் கன்னியாகுமரி நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் கலப்பதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா, புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 5 திருவிழா காலங்களில் மட்டும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
அதேபோல இந்த கடல் பகுதியில் 16 விசேஷ தீர்த்தங்கள் அமைந்து உள்ளன. அதுமட்டுமின்றி தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய முக்கிய விசேஷ நாட்களில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அப்படிப்பட்ட புண் ணிய தீர்த்த தலமான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடல்பகுதியில் கன்னியாகுமரி நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் கலக்கிறது.
அதுமட்டுமின்றி தற்போது கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர்ஓடை பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதிதெரு வழியாக அம்மனின் ஆராட்டு மண்டபம் அருகில் கடலில் கலக்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கழிவுநீர் கலப்பதன் மூலம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் ஆராட்டு மண்டபம் கடல் பகுதி மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த கழிவுநீர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஆராட்டும் மண்டபம் அருகில் உள்ள கடலில் கலப்பதற்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட சுவாமிநாதபுரம், பாலசுப்பிரமணியபுரம்,ஒற்றையால்விளை, பழத் தோட்டம், மாதவபுரம், கலைஞர் குடியிருப்பு, தெற்கு குண்டல், வடக்கு குண்டல், கன்னியாகுமரி மறக்குடி தெரு, வடக்கு தெரு ஆகிய 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனுகொடுத்தனர்.
உலகப்புகழ்பெற்ற கன்னியாகுமரி முக்கோணவியல் கழிவுநீர் கலப்பதை தடுத்திட உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


