பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்
திருக்கல்யாண விழா நாளை திங்கட்கிழமை
நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடை பெறும். அதுபோல இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அறம் வளர்த்த நாயகி அம்மன் வித விதமான வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
நாளை திங்கட்கிழமை திருக்கல்யாண விழா நடக்கிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்ய பறக்கை யில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்ன வாகனத்தில் ஆசிரமம் சோழன்திட்டை அணைக்கட்டு கரையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில் மணமகளான அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்தப் பல்லக்கில் பூமாலை தோரணம் கட்டி, மேளம், தாளம் முழங்க ஆசிரமத்திலிருந்து ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலை வந்தடைகின்றனர்.
இரவு 8 மணிக்கு அலங்கார மண்டபத்தில் திருமால் முன்னிலையில் தாணுமாலயசாமி – அறம் வளர்த்த நாயகி திருமண நிகழ்ச்சி நடக்கிறது.திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலை ஆகியவை வழங்கப்படும். தொடர்ந்து உமா மகேஸ்வரர் மற்றும் திருமால், அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.
செவ்வாய்க்கிழமை மாலையில் இந்திரன் தேராகிய சப்பரத்தில் ரத உற்சவம் நடைபெறுகிறது. இரவு ஆராட்டு விழாவுடன் திருக் கல்யாண விழா நிறைவு பெறுகிறது.





