தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆரவாரத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.கடந்த பட்ஜெட்டில், ‘தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை படிப்படியாக செயல்படுத்துவோம்’ என உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
திமுக அரசு வாக்குறுதி நிறைவேற்றி வருகிறது. இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றதும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கோவிட் பெருந்தொற்றின் 2 மற்றும் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது.தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. தீர்க்கமான நடவடிக்கையால் அரசின் வருவாய் பற்றாக்குறை 4.61% ல் இருந்து 3.8% ஆக குறையும்.வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி கரையில் கிடைத்த 3,200 ஆண்டுகள் பழமையான தொல்பொருட்கள் தமிழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன.
மாநில உரிமைக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பணிகள் பாதிக்கப்படும்.
வரும் நிதியாண்டு பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உக்ரைன் போர் காரணமாக பணவீக்கம், வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். முதல்வரின் முகவரி என்ற புதிய துறை மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி அமைச்சர் கூறி மேலும் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ள நிதி விபரங்கள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார்.
![தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் துவக்கம்..அதிமுக வெளிநடப்பு.. 1 images 83](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/images-83.jpeg)
![தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் துவக்கம்..அதிமுக வெளிநடப்பு.. 2 gallerye 100853996 2986140](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/gallerye_100853996_2986140.jpg)
![தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் துவக்கம்..அதிமுக வெளிநடப்பு.. 3 images 84](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/images-84.jpeg)
தமிழக சட்டசபை இன்று கூடியதும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கியதும், பேச வாய்ப்பு கேட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் முடிந்ததும் பேச வாய்ப்பு தருவதாகவும், தற்போது அதிமுகவினர் கூறும் கருத்துகள் அவை குறிப்பில் இடம்பெறாது, பட்ஜெட் உரையை கேட்குமாறு எனவும் தெரிவித்தார். இதனை ஏற்காத அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.