மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில், நேற்று 17-ஆம் தேதி ரிலீசாகி உள்ளது. இதனால், கன்னட ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.
கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் ஒரு நடிகர் என்பதை தாண்டிய அவரது மனிதநேயம், மக்களுக்கு உதவும் குணம் ஆகியவற்றால் இன்று வரை மறக்க முடியாமல், மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி முடிந்து வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
46வயதேயான அவரது மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரது உடல் பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
‘ஜேம்ஸ் படத்தில் புனித் ராஜ்குமார் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில் நேற்று 17 ஆம் தேதி ரிலீசாகி உள்ளது. புனீத்தின் கடைசி படம் திரையில் வருகிறது என்பதால், அவரின் ரசிகர்கள் இந்தப் படத்தை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
திரையில், ராணுவ உடையில் புனித் ராஜ்குமாரை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் மல்க படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்துவம் விதமாக ஒருவாரம் வேறெந்த கன்னட திரைப்படங்களும் வெளியிடப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.