உத்தரப்பிரதேச மாநில புதிய அரசு 25-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடைபெற உள்ள உத்தரப்பிரதேச அரசு பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உ.பி மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களான 260 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து வரும் 25ம் தேதி இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
கோவாவில் பாஜக தலைமையிலான புதிய அரசு 23-ம் தேதி புதனன்று பதவியேற்க உள்ளது. கோவாவுக்கான பாஜக மேலிட பார்வையாளர்கள் நரேந்திரசிங் தோமர், எல். முருகன் ஆகிய இருவரும் இதற்காக புதனன்று கோவாவுக்கு செல்ல உள்ளனர். அன்று கோவா பாஜக சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏ க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற பாஜக தலைவர் தேர்வு செய்யப்பட்டவுடன் அன்றே புதிய அரசு பதவியேற்க உள்ளதாக கோவா மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். புதிய அரசின் பதவியேற்பு விழா ராஜ்பவனில் புதிதாக கட்டப்பட்டுள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறுகிறது.
முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா புதிய அமைச்சரவையின் 80% பெயர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.