இன்ற சனிக்கிழமை நாமக்கல் நரசிம்ம சாமி தேரோட்டம் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
தேர்திருவிழாவையொட்டி நாமக்கல் நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நரசிம்மர் மற்றும் அரங்கநாதருக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பட்டாச்சாரியார்கள் திருமணம் நடத்தி வைத்தனர்.


தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்பிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் சமர்பித்து சாமியை தரிசனம் செய்தனர்.
இன்று நரசிம்ம சாமி தேரோட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாலையில் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை காலையில் திருமஞ்சனம், தீர்த்தவாரி, பல்லக்கு புறப்பாடு, இரவு சத்தாவரணம் கஜலட்சுமி வாகனத்தில் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சிகளும், 21-ம் தேதி திங்கட்கிழமை இரவு வசந்த உற்சவம், பல்லக்கு புறப்பாடு,
22-ம்தேதி செவ்வாய்க்கிழமை இரவு விடையாற்றி உற்சவம், 23-ம் தேதி புஷ்ப பல்லக்கு புறப்பாடு, 24-ம் தேதி வியாழக்கிழமை காலை புஷ்ப யாகம், இரவு ஊஞ்சல் உற்சவம், 25-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது.



