உக்ரைன் நாட்டில் சேவை அளித்து வரும் சமூக வலைத்தளங்கள், ரஷ்யாவுக்கு எதிரான செய்திகளை பரப்புவதற்கு அனுமதிப்பதாகக் கூறி, அவற்றை ரஷ்ய அரசு தடை செய்து வருகிறது.
முன்னதாக, இதற்குரிய ‘Fake News Law’ எனும் சட்டத்தையும் ரஷ்ய அரசு அமல்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ட்விட்டர், பேஸ்புக் ஆகிய மிகபெரும் சமூக வலைத்தளங்கள் ரஷ்ய நாட்டில் தடை செய்யப்பட்டன. மேலும், இன்ஸ்டாகிராம் விரைவில் தடை செய்யப்படும் என ரஷ்ய மாநில தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் Roskomnadzor அறிவித்திருந்தது.
செய்வதறியாமல் திகைத்து நின்ற ரஷ்ய இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு ஆறுதல் தரும் விதமாக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், இன்ஸ்டாகிராம் தளத்திற்கு மாற்றாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை பகிரும் தளம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்த அறிவிப்பில், “ரோஸ்கிராம் எனும் புதிய செயலியை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மார்ச் 28 ஆம் தேதி இந்த செயலி பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்படும்.
ரஷ்ய பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் ரோஸ்கிராமில் தொடலாம். படைப்பாளர்களுக்கு வருவாய் ஈட்டும் அம்சமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோஸ்கிராமில் இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் 14ஆம் தேதி மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமை ரஷ்யா முடக்கியது. இதனால், 8 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். இது பயனர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராம் தடை குறித்த தகவல்கள் ரஷ்யாவில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பயனர்கள் பலரும் பிற சமூக ஊடகங்களின் இணைப்புகளை பதிவிட்டு, இனி எங்களுடன் இதில் இணைந்திருங்கள் என்று தெரிவித்திருந்தனர்.
சிலரோ இன்ஸ்டாகிராமை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சிறந்த VPN-கள் குறித்த பதிவுகளை இணையத்தில் பரவவிட்டு வந்தனர்.
மேலும், இந்த செயலியில் புதிதாக சில அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக Rossgram இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, Crowdfunding மற்றும் பணம் செலுத்தி கணக்குகளை அணுகும் அம்சங்கள் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசு தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தையும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவெடுத்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ரஷ்யா தனது ஆதிக்கத்தை செலுத்த தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே, உள்நாட்டில் உள்ள Rostec நிறுவனத்தால், AYYA T1 ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது