பாபநாசத்தில் உலக தண்ணீர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் குருவனம் சார்பில் மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள் சார் இயற்கை மலைக் காப்பு மையம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு அமைப்பு இணைந்து உலக தண்ணீர் நாளை முன்னிட்டு நடத்திய 3 நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
செவ்வாய்கிழமை பாபநாசம் கோவில் படித்துறையில் நடைபெற்ற 3 ஆம் நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வி.விஷ்ணு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 200 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியம் மற்றும் கவிதைப் போட்டி, 2 ஆம் நாள் நிகழ்ச்சியில் தாமிரவருணி கரையில் பிரபல ஓவியர்கள் வரைந்த ஓவியக் கண்காட்சி, தாமிரவருணி தூய்மைப் பணி, விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாபநாசத்திற்கு வரும் பயணிகளுக்கு வசதியாக வாகனங்கள் நிறுத்துமிடம், உலர் கழிப்பிடம் அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தார். மேலும் சென்னைக் கூத்துப்பட்டறை மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியர் சிந்து, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல்படை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், குருவனம் நிறுவனர் ஓவியர் சந்ரு, மூத்த ஆராய்ச்சியாளர்கள் சுபத்ரா, மதிவாணன், நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், சிறப்புக் காவல்படை காவலர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கவின் கலைக் கல்லூரி மாணவர்கள், கூத்துப்பட்டறை மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.