க ர்நாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த தேர்வுகளை, 8.74 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதுகின்றநிலையில் இந்த தேர்வுகளில் பங்கேற்பவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று, கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வைப் புறக்கணிப்பதாக சில முஸ்லிம் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
ஹிஜாப் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறும் எவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் அரசு விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், எந்த பள்ளி மாணவியும் இதுபோன்ற விஷயங்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்தி உள்ள கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, விதிகளை மீறும் எவரும் நடவடிக்கை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை இன்று சந்தித்த மாண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரீஷ், ஹிஜாப் விவகாரத்தில் கல்வி தொடர்பான உங்கள் முன்னுரிமைகளை நீங்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹிஜாப் அணிய அனுமதிக்கும் நிறுவனத்தை நீங்கள் தேர்வு செய்யலாம் என்றும் முஸ்லிம் மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை உங்களால் மீற முடியாது என்றும், ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே பெற்றோரின் ஒப்புதலுடன் சொந்த விதிகளை உருவாக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ் 2021’ போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா திரும்பி இருந்த அவரை கவுரவிக்கும் வகையில் விழா நடந்தது. அதில் நிருபர் ஒருவர் அவரிடம் ஹிஜாப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தவர்கள் அரசியல் கேள்விகள் எதுவும் கேட்காமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரது வாழ்க்கை பயணம் வெற்றி மற்றும் உத்வேகமாக இருந்தவை பற்றி கேளுங்கள் என்றனர்.ஆனால் அந்த நிருபர் இதே கருத்தை ஹர்னாஸ் சொல்லட்டும் என்றார். உடனே ஹர்னாஸ் சாந்து கூறியதாவது:-
நீங்கள் எப்போதும் ஏன் பெண்களையே குறி வைக்கிறீர்கள்? இப்போது கூட நீங்கள் என்னை குறி வைத்துள்ளீர்கள். ஹிஜாப் பிரச்சினையில் கூட பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் (பெண்கள்) அவர்கள் விரும்பும் வழியில் வாழட்டும். அவர்களின் இலக்கை அடைய விடுங்கள்.பெண்களை பறக்க அனுமதியுங்கள். அவர்களது இறக்கைகளை வெட்ட வேண்டாம். அப்படி வெட்ட வேண்டும் என்றால் உங்கள் இறக்கைகளை வெட்டி கொள்ளுங்கள் இவ்வாறு ஹர்னாஸ் சாந்து கூறியுள்ளார்.இக்கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






