மதுரை ரயில்வே கோட்டத்தில் கொரோனாவை காரணம் காட்டி
நிறுத்தப்பட்ட பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவையை
மீண்டும் இயக்க பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலை காரணம் காட்டி கடந்த 2020 மார்ச் 21 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டுமென தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரைக் கோட்டத்தில் திருநெல்வேலி முதல் மயிலாடுதுறை இணைப்பு ஈரோடு வரை வந்து சென்ற பயணிகள் ரயிலானது நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தது. இந்த வண்டியானது, நெல்லையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து இரு ரயில்களாக திருச்சி வழியாக தஞ்சாவூர்,மயிலாடுதுறை வரைக்கும் சென்றது. திண்டுக்கல்லில் இருந்து கரூர் வழியாக ஈரோட்டிற்கும் இணைப்பு ரயிலாக இந்த வண்டி இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயில் வண்டியை அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், புனித ஸ்தலங்களுக்கு செல்லக் கூடிய பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர்.இந்த பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபோல் எர்ணாகுளம்-செங்கோட்டை-ராஜபாளையம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு கொரோனா வா கடந்த இரு ஆண்டுகளாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது.
இதுபோல் செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை இடையே பகல் நேர பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயிலும் இயக்குவதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மதுரை கோட்ட ரயில்வே யிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது மதுரை-செங்கோட்டை-மதுரை இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில்களை மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றி இயக்கவும்,மதுரை-செங்கோட்டை-கொல்லம்-மதுரை இடையே நேரடி ரயில் இயக்கவும் புனலூர்-செங்கோட்டை-விருதுநகர்வழித்தடத்தில் நடைபெறும் மின்மயமாக்கும் பணிகள் விரைவில் முடிக்கவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.





