
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்திற்கான “தாமரை வாக்குறுதிகள்” என்ற பெயரிலான தேர்தல் அறிக்கையை பாஜக முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி. நட்டா சென்னையில் இன்று வெளியிட்டார். தமிழக மக்களின் நலன் காக்கவும், வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்கிடவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழியில், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்திடும் வகையிலான தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட பாஜக.,வினர், தமிழக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:
1.குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.
2. ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
3. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோகுற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
4. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும்.
5. முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்.
6. திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப் படுவதையும் உறுதி செய்வோம்.
7. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க ‘கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு’, துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும், மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண
தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
8. ‘உழவே தலை’ திட்டத்தைத் தொடங்கி, பிஎம்-கிசான் நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 கூடுதலாக வழங்கி, ஆண்டுக்கு மொத்தம் ₹9,000 நிதியுதவி வழங்குவோம். மேலும் மாநிலக் கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டு 100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) நிறுவப்படும். அத்துடன் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும்.
9.பஞ்சாயத்து அளவில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்காக சிறிய எஃகு சேமிப்புக் கிடங்குகளையும் (Steel Silos), பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்களுக்காகக் குளிர்பதனக் கிடங்குகளையும் அமைப்பதன் மூலம், சேமிப்பு இழப்புகளையும் அவசர காலத்தில் குறைவான விலைக்கு விற்பனை செய்வதையும் (Distress sales) தடுப்போம். மேலும், வட்டார அளவில் போக்குவரத்து வசதியுடன் கூடிய சந்தை இணைப்பு மையங்களையும் (Market Connector Hubs), மாவட்ட அளவில் பிரம்மாண்ட எஃகு சேமிப்புக் கிடங்குகளையும் உருவாக்கித் தடையற்ற பாதுகாப்பை உறுதி செய்வோம்.
10.’உழவர் உறுதுணைத் திட்டத்தின்’ கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றைத் தொடங்குவதற்கு ஒருமுறை நிதியுதவியாக ₹50,000 வழங்கப்படும்.
11. மீனவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கும் வகையில், 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ₹8,000-லிருந்து ₹12,000-ஆகவும், மீன்பிடி குறைநிலை காலத்திற்கான உதவித்தொகையை ₹6,000-லிருந்து ₹8,000-ஆகவும் உயர்த்துவோம். மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
12. தமிழக இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ₹10 லட்சம் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காரணமாக இ.எம்.ஐ (EMI) செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி, மாவட்டந்தோறும் தமிழ் வழியிலும் பயிற்சி அளிக்கும் போட்டித் தேர்வு மையங்கள், திறன் கணக்கெடுப்பு மற்றும் தொழில்துறையுடன் இணைந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
13. தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.
14. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செயற்கை நுண்ணறிவு (Al) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) துறைகளில் செய்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பிரத்யேக வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
15. முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி (GST) தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.
16. மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ₹25,000 மானியம் வழங்கப்படும்.
17. தமிழக நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோவில் மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் ‘திருக்கோவில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் (கற்பூரம், நெய்/எண்ணெய், 60 கிலோ அரிசி குங்குமம், மஞ்சள், விபூதி), ஒருமுறை வழங்கப்படும். கோயில் உபகரணங்கள் (கோயில் மணி தாம்பூலம், ஆர்த்தி தட்டுகள், வேட்டித் தொகுப்பு) மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ₹25,000 நிதியுதவி வழங்கப்படும்.
18. மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான ‘பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா’ (BHAVYA) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 10 ‘பிளக்-அண்ட்-பிளே’ (Plug-and-Play) தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற்பூங்காக்கள் மூலம், தமிழகத் தொழிலதிபர்கள் அத்திட்டத்தின் முழுப்
பலன்களையும் பெறுவதை நமது அரசு உறுதி செய்யும்.
19. இ-ஷ்ரம் (e-Shram) போர்ட்டலில் 100% பதிவை உறுதி செய்வதன் மூலம் கிக் தொழிலாளர்களை (Gig workers) ஆதரிப்போம். மாதந்தோறும் ₹1,500 மின்வாகன சார்ஜிங் அல்லது எரிபொருள் மானியம், ஒருமுறை வழங்கப்படும் ஐஎஸ்ஐ (ISI) சான்றளிக்கப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் தொகையை ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தி வழங்குவோம்.
20. ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையையும் மேம்படுத்தும் வகையில், கூடுதல் 3 ஆம்புலன்ஸ்கள், உயர் சிறப்புப் பிரிவுகள் (Super-speciality wings), இலவச டயாலிசிஸ் மையங்கள், போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், 4 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), முழுமையாகச் செயல்படும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், முதியோர் நல மையங்கள், 10 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) மற்றும் பிரத்யேகத் தாய்ப்பால் வங்கிகள் ஆகியவை அமைக்கப்படும்.
21. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஆண்டுதோறும் இல்லத்திற்கே சென்று இலவச உடல்நலப் பரிசோதனை செய்யும் திட்டம், மாவட்டந்தோறும் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், அதிநவீன இசிஆர் (ECR) விபத்து சிகிச்சை மையம், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 50-ஆக உயர்த்துதல் மற்றும் அரிய வகை நோய்கள் பாதுகாப்பிற்காக ₹100 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டம் ஆகியவற்றின் மாநில அளவிலான சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.
22. மத்திய அரசுடன் இணைந்து, நிலத்தை நியாயமான விலையில் கையகப் படுத்துவதன் மூல தமிழகத்தின் இரயில்வே கட்டமைப்பை முழுமையாக விரிவுபடுத்துவோம். இதற்காக சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையே அதிவேக இரயில் வழித்தடங்கள் (High Speed Rail Corridors), கோவை – திருப்பூர் – சேலம் இடையே பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பு (RRTS), விழுப்புரம் – சென்னை இடையே சிறு-நகர்ப்புற
இரயில் சேவை (Semi-Urban Rail), ஹைட்ரோ பவர் ரயில் திட்டம் (Hydro Power Train) மற்றும் சென்னையை டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுடன் இணைக்கும் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் (Sleeper Vande Bharat) இரயில்கள் போன்ற திட்டங்கள் மூலம் இரயில் இணைப்பை விரிவுபடுத்துவோம்.
23. நவீன காலத் தொழில்நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களை வழங்கும் தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவி, மாநிலத்தின் அனைத்து மண்டலங்களிலும் அதன் வளாகங்களை அமைப்போம்.
24. தமிழகத்தை இந்தியாவின் கடல்நீர் சுத்திகரிப்புத் தலைநகராக (Desalination Capital of India) மாற்றுவோம்; இதற்காகக் கூடுதலாக 500 MLD திறன் கொண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல், வட்டப் பெருங்குழாய் வழித்தடம் (Ring main network) மூலம் நீர் அமைப்புகளை இணைத்தல் மற்றும் கடலூரில் பிரத்யேகக் கடல்நீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சி மையத்தை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்போம்.
25. மத்திய அரசின் ‘பி.எம். சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தமிழகப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும், மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன் மாநில அரசின் பங்காக ₹25,000 கூடுதல் ஊக்கத்தொகை (State Top-Up) வழங்கப்படும்.
26. தமிழகத்தின் கடல், மலைகள், காடுகள், கோயில்கள் மற்றும் பண்பாடு சுற்றுலா மூலம் ஆண்டு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவோம்; அத்துடன், நாட்டுப்புற மரபுகள் மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் நாடு தழுவிய அளவில் ‘தமிழக கிராம தெய்வங்கள் சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்துவோம்.
27. தென் தமிழகத் திருத்தலப் பயண அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் ‘தென் தமிழகத் திருத்தல யாத்திரை’ திட்டம் செயல்படுத்தப்படும்; இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக பக்தர்கள் வருகை தரும் முக்கிய கோவில்களில், நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் உள்ளூர் மக்களுக்காக பிரத்யேக தரிசன நேரம் ஒதுக்கப்படும்.



