கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா இன்று காலை பக்தி பரவசத்துடன் துவங்கியது. இவ்விழாவில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடைபெற வட்டவிளையில் ஒரு கோயிலும், தூக்க நேர்ச்சை நிறைவேற்ற வெங்கஞ்சியில் மற்றொரு கோயிலும் உள்ளது. வெங்கஞ்சி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தன்று தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் இங்குள்ள அம்மனுக்கு தூக்க நேர்ச்சை செலுத்தப்படுகிறது. இதில் 3 மாதத்துக்கு மேல் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே இந்த நேர்ச்சையில் கலந்து கொள்ள முடியும்.
இக் கோயிலில் இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா மார்ச் 26 ஆம் தேதி கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் தமிழ் கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்க திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் 1,098 குழந்தைகள் தூக்க நேர்ச்சைக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் பக்தி பரவசமூட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை இன்று காலையில் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம் நடந்தது. காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை துவங்கியது. 45 அடி உயர தூக்க வில்லில் முதலில் குழந்தைகள் இன்றி தூக்கக்ககாரர்கள் 4 பேர் கோயிலை சுற்றி வரும் அம்மன் தூக்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த தூக்க நேர்ச்சையில், ஒரே நேரத்தில் 4 பேர் தங்கள் கைகளில் தலா ஒரு குழந்தைகளை சுமந்தபடி கோயிலை ஒருமுறை சுற்றி வந்து, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்து. இதன்படி தூக்க வில் 276 முறை கோயிலை வலம்வந்து நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. தூக்க நேர்ச்சை நிறைவுபெற்றபின் வில்லின் மூட்டில் குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது.
தூக்கத் திருவிழாவில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழகம் கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.






