மும்பையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய எக்ஸ் இ கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார துறை கூறிய தகவல் இன்று வெளியாகியுள்ளது
ஒமைக்ரான் வகை கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது எக்ஸ் இ எனப்படும் புதிய மாறுபாடு. இது ஒமைக்ரான் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரண்டு மாதிரிகளின் கலப்பாகும்.
பிரிட்டனில் பரவிவரும் இந்த புதிய வகை கொரோனா, இந்தியாவிலும் முதன் முறையாக மும்பையில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த புதிய வகை கொரோனா தொற்று மும்பையில் கண்டுபிடிக்க ப்பட்டதாக நேற்று தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய வகை கொரோனா தொற்றான கொரோனா எக்ஸ்இ இந்தியாவில் முதல் முறையாக மும்பையை சேர்ந்த ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரானின் மாறுபாடடைந்த எக்ஸ்இ வைரஸ் தொற்று இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பரவியதே அந்த தகவலாகும்.
இந்த நிலையில் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் புதிய திரிபுவால் அந்த நபர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என டெல்லியில் உள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எக்ஸ்இ வகை மாறுபாடு என்று கூறப்படும் மாதிரி, மரபணு நிபுணர்களால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த மாறுபாட்டின் மரபணு அமைப்பு எக்ஸ்இ வகை மாறுபாட்டின் மரபணு படத்துடன் தொடர்புபடுத்தவில்லை என நிபுணர்கள் ஊகித்துள்ளனர்.
தற்போதைய சான்றுகள் இது கொரோனா வைரசின் எக்ஸ்இ வகை மாறுபாடு என காட்டவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த மரபியல் ஆராய்ச்சி நிபுணர் ராகேஷ் மிஸ்ரா, எக்ஸ் இ திரிபுவை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். அதே நேரம் வழக்கமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றுவதை மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.





