கோயம்புத்தூரில் ரூ 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் டவரை காணவில்லை என்று, தரப்பட்ட புகாரை படித்துபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில்
வேலாண்டிபாளையம் தடாகம் ரோடு கோனார் வீதியில் ஏர்செல் நிறுவன மொபைல் போன் டவர் இருந்தது. இந்த டவரையும், அவற்றுடன் இருந்த உதிரி பாகங்களையும் காணவில்லை என்று ஜி.டி.எல்.இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவன அதிகாரி அர்ஜூனன் என்பவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரை படித்ததும் போலீசார் மயக்கம் போட்டு விழாத குறையாக அதிர்ச்சி அடைந்து வடிவேலு நடித்த சினிமா காமெடியில் வருவதை போல, கிணத்தைக் காணோமா, கிணத்துல இருந்த பம்புசெட்டை காணோமா’ என்பதை போன்ற காட்சிகள் அரங்கேறின.
புகார் கொடுத்தவரிடம், டவரை காணோமா, அதில் இருந்த பேட்டரியை காணோமா என்று திரும்ப திரும்ப விசாரித்தனர். அதற்கு அவர்களோ கடைசியாக சோதனைக்கு வந்து சென்றபோது, டவர் அதே இடத்தில்தான் இருந்தது. சில நாட்களில் யாரோ களவாடிச் சென்று விட்டனர். அதன் மதிப்பு 30 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் என்றனர்.கடந்தாண்டு மார்ச் முதல் ஏப்28 வரையிலான காலத்தில், இந்த திருட்டு நடந்திருப்பதாகவும் நிறுவனத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





